ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்

இங்கிலாந்து Brexit ஒப்பந்தத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி சுமார் ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கங்கள் இன்று வரை இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முக்கியமாக உணரப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றின் பிரகாரம், சுமார் 53 சதவீத மக்கள் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் இந்த மாற்றத்திற்கு அதிக ஆதரவு அளிப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக பொருளாதார சவால்கள், வர்த்தக தடைகள், வேலை வாய்ப்பு குறைவு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

Brexitக்குப் பின்னர் சில தொழில்துறைகள் சர்வதேச சந்தைகளில் போட்டியிடுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆளும் தொழில் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர்வது என்ற நிலைப்பாட்டை நேரடியாக ஆதரிக்கவில்லை் என்றாலும், அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நடுநிலை அணுகுமுறையை பின்பற்றுகிறது.

ஆனால் இந்த நிலைப்பாடு தெளிவற்றதாக இருப்பதாக எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். “மீண்டும் சேர்வதா? அல்லது முழுமையாக வெளியே தொடர்வதா?” என்ற முக்கிய கேள்விக்கு தொழில் கட்சி தெளிவான பதிலை வழங்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது.

அதேவேளை, Brexit ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்கள் மீண்டும் அரசியல் தளத்தில் செயற்படத் தொடங்கியுள்ளன. இது எதிர்வரும் தேர்தல்களில் Brexit மீண்டும் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறக்கூடும் என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )