தோட்டத் தொழிலாளர்களுக்கு 05 மில்லியன் ரூபாவில் புதிய வீடு

தோட்டத் தொழிலாளர்களுக்கு 05 மில்லியன் ரூபாவில் புதிய வீடு

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ், பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன,

பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, 650 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 05 மில்லியன் ரூபாய் (50 இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

தொழிலாளர்கள் தற்போது பணிபுரியும் தோட்டங்களிலேயே பாதுகாப்பான இடங்களில் 10 பேர்ச்சஸ் காணி இதற்காக ஒதுக்கப்படும்.

குறித்த வீடுகளுக்குத் தேவையான மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் ஏனைய பொதுக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும், ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சேவை தொடர்ச்சியாகத் தேவைப்படுவதால், அவர்கள் பணிபுரியும் தோட்டப் பகுதிகளிலேயே இந்தப் பாதுகாப்பான குடியிருப்புக்களை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, மண்சரிவு மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது அவசியமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, மண்சரிவு அபாயம் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வீடுகளை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )