
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியின் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை.
கூட்டணியில் சேரவேண்டிய கட்சிகள் சேர்ந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. அவர்களும் அதைச் சொல்லி விட்டனர்.
எனவே, இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
