
இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு
மத்திய கிழக்கில் போர் நீடித்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரும் குழுவினர் ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மதிப்பாய்வை நிறைவு செய்வதும், மத்திய கிழக்கு மோதலால் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதுமே இந்த விஜயத்தின் நோக்கமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் முடிவில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்பது குறித்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டைக் கொண்டிருக்கும்.
மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், உலகளாவிய பொருளாதார அபாயங்களை மதிப்பிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்க ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக் மேலும் தெரிவித்துள்ளார்.
