
கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்
கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் ஆகிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தலைமை நிர்வாக அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்
மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது, ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18(ஈ) பிரிவின் கீழ், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் வேதன மற்றும் ஏனைய சலுகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதுடன், அவை தொடர்பான சட்ட ரீதியான உறுதிப்பாடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பராமரிக்க, இதுவரை செய்து வந்த அதே வழியில் தொடர்ந்து தங்கள் கடமைகளைச் செய்யுமாறு மின்சார ஊழியர்களிடம் குறித்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கடமைகளைச் செய்யத் தவறுவது அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் கீழ் கடுமையான குற்றமாகும் என்று நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
