
தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை சிறுத்தைப்புலியிடமிருந்து பாதுகாப்பதற்காக, தேயிலை தோட்டத்தில் நடமாடிய சிறுத்தைப்புலியை பிடிக்கும் நோக்கில் இந்த கம்பி வலை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப் பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை பரிசோதித்த பொகவந்தலாவ பொலிஸார், அதே பகுதியிலேயே தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பி வலைகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றியுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தைப்புலியின் உடல் ஹட்டன் நிதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும், இந்த கம்பி வலைகளை அமைத்த சந்தேகநபர்களை கைது செய்ய பொகவந்தலாவ பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
