கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ருமேனியா நாட்டில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூபாய் 915,000.00 பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் தொடர்பாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு, இவ்வாறு அவரை ஏமாற்றியுள்ளார். ஆரம்ப நடவடிக்கைகளுக்காக முதலில் ரூபாய் 4,70,000 தொகையை பெற்றுள்ளார்.

அதன் பின்னர், மீதமுள்ள நடவடிக்கைகளுக்காக ரூபாய் 1,600,000செலவாகும் என தெரிவித்து, அதில் பாதி தொகையை வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து, அப்பெண் ரூபாய் 400,000 தொகையை சந்தேகநபரின் வழங்கிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

காலம் செல்லச் செல்ல வெளிநாடு செல்லும் நடவடிக்கைகள் தாமதமானதுடன், பல தடவைகள் மேலதிக பணம் கோரப்பட்ட போதிலும், உரிய சேவைகள் வழங்கப்படாத காரணத்தினால், அந்த பெண் பணம் செலுத்திய ரசீதுகளின் பிரதிகளுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், உரிய முறையில் சரிபார்த்து, நம்பகமான நிறுவனங்களையே தேர்ந்தெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மோசடி நோக்கத்துடன் செயல்படும் நபர்களின் வஞ்சக வாக்குறுதிகளுக்கு ஏமாறி, தங்களது பணத்தை இழக்க வேண்டாம்.

சேவை வழங்குபவர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதற்காக, பணம் செலுத்திய ரசீதுகள் மற்றும் சேவை வழங்குபவரின் தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )