
இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இயற்பை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் நிர்மாண முயற்சிகளுக்கு நிதி உதவியை வழங்கவுள்ளதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரிடர் காரணமாக இந்த நாடுகளில் 1300க்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இலங்கையில் மட்டும் 450க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவுகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றனர். எண்ணற்ற வீதிகளும், பாலங்களும் சேதடைந்துள்ளன.
2021ஆம் ஆண்டுக்கு பின்னர் இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிவாரண நடவடிக்கைகளுக்கு பெருமளவில் நன்கொடை வழங்கி வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கும் ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கியிருந்தது.
அதேபோல், கடந்த ஒக்டோபர் மாதம் மெலிசா புயல் ஏற்படுத்திய சேதம் காரணமாக ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் தீவு நாடுகளுக்கும் ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
