ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப்

ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சனிக்கிழமை 03 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார்.

அவர் 2 ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ட்ரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

இதன்போது மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா மற்றும் ட்ரம்ப் இடையே சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய பயணத்துக்கு பின்னர் ட்ரம்ப் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன்பின்னர் ட்ரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இதன்போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கை ட்ரம்ப் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைகாலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் இடம்பெற்று வருகிறது. நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா மீதான வரியை 155 சதவீதமாக அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்ப் மற்றும் ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Share This