விமல், கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மீண்டெழ முயற்சி

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடாமலே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகின்றார்கள்.
இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்றும் கடந்த அரசுதான் ஆட்சியில் உள்ளது என்று நினைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.
போலியான விடயங்களைச் சமூக மயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர்கள் முன்னிலையாக வேண்டும்.
இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். மக்கள் மத்தியில் தவறான விடயத்தை சமூகமயப்படுத்த இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.