இவ்வாண்டில் அதிகரித்துள்ள மின் துண்டிப்புகள்
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்புகள் அதிகரித்துள்ளதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனைனயாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி , 2023ஆம் ஆண்டில் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தாமையினால் 970,933 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சஞ்சீவ தம்மிக்க சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் 628,286 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 505,949 வீடுகள், 8,579 தொழிற்சாலைகள், 2,090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 111,276 கடைகள் மற்றும் ஏனையவை உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி,கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2,660 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3,443 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.