போலி பிரித்தானியா கடவுச்சீட்டு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டவர் கைது

போலி பிரித்தானியா கடவுச்சீட்டு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டவர் கைது

போலியான பிரித்தானியா கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஈரானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான ஈரானிய நாட்டவர் நேற்று (19) இரவு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக இரவு 8:00 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரது செக்-இன் செயல்பாட்டின் போது, அவர் வழங்கிய பிரித்தானியா கடவுச்சீட்டில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது அனைத்து ஆவணங்களுடன் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் அவரை பரிந்துரைத்தனர்.

அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளில் கடவுச்சீட்டு மோசடியாக மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. போலி ஆவணத்திற்காக ஈரானில் உள்ள மோடிசடியாளர் ஒருவருக்கு அவர் 15,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியதும் தெரியவந்தது.

அவரது பணப்பையை மேலும் பரிசோதித்ததில், அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு மற்றும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு செல்லும் விமான டிக்கெட்டை அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, ஈரானிய நாட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Share This