செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு கல்வி அமைச்சில் இன்று (28) நடைபெற்றது.
அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப அணுகுமுறையாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதும் மற்றும் தயார்படுத்துவதும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் ஊடாக கல்வித் துறையின் தரத்தை காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்த முடியும் என்று கூறினார்.
இங்கு ஆரம்ப உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தில் கல்வி அமைச்சின் பங்கு, கல்வி அமைச்சில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதற்காக திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பில் உரையாற்றினார்.
ஜனாதிபதி அலுவலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு,கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆகியவை இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக இணைந்தனர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக
கலுவெவ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.