கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்

கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், எனினும், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவரின் மனைவி மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதுபோன்ற சம்பவம் பொறுத்துக்கொள்ள முடியாது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவை அரசு ஏற்பதாகவும் மேலும் அரசு அவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவளிக்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.
கடன் மற்றும் நிதி நெருக்கடியால் அவதிப்படும் அந்த பெணிண் நிலைமையை அறிந்த முதலமைச்சர், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஐந்து லட்சம் நிதி உதவி வழங்குவதாக உறுதி அளித்தார்.
பெண்ணுக்கு நடத்த சம்பவம் குறித்தும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் சென்றடைந்தது என்று உறுதி படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.