கொழும்பு -வெள்ளவத்தையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – வெள்ளவத்தை ராமகிருஷ்ணா பிளேஸில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராசையா தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டிற்கு பணியாளராக வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (04) காலை மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் உள்ள மர கைப்பிடியின் உதவியுடன் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி ஜன்னல் ஷட்டர்களை சுத்தம் செய்யும் போது இந்த விபத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.