சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் ஹென்ரிச் கிளாசென்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் ஹென்ரிச் கிளாசென்

தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரரும், உலகின் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான ஹென்ரிச் கிளாசென், தனது 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிளாசென் தென்னாப்பிரிக்கா அணிக்காக நான்கு டெஸ்ட், 60 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தந்த வடிவங்களில் முறையே 104, 2141 மற்றும் 1000 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கிளாசென் அறிமுகமாகியிருந்தார். பின்நாட்களில் டி20 போட்டிகளில் மிகவும் அதிரடியாக துடுப்பெடுத்தாடும் வீரராகவும் மாறியிருந்தார்.

“சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் சோகமான நாள். எதிர்காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது

இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் அதில் எனக்கு முழுமையான அமைதியும் உள்ளது,” என்று கிளாசென் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் சிறந்த நட்புகளையும் உறவுகளையும் நான் உருவாக்கியுள்ளேன்.
தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியதன் மூலம் என் வாழ்க்கையை மாற்றிய சிறந்த மனிதர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பளித்தது.

தேசிய அணிக்காக விளையாடியமை மிகப்பெரிய கௌரவமாக இருந்தது, எப்போதும் இருக்கும். இந்நிலையில், எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் இருக்கிறேன்.

மேலும் எனது வாழ்க்கையில் என்னையும் எனது அணியினரையும் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று ஹென்ரிச் கிளாசென் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகம் முழுவதும் உள்ள டி20 கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This