“இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல” – இலங்கை தமிழரின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

இந்தியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழரான சுபாஸ்கரன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், இவரை குற்றவாளி என அறிவித்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
எனினும், கடந்த 2022ஆம் ஆண்டில், சென்னை உயா் நீதிமன்றம் சுபாஸ்கரனின் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது.
இந்த 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் இந்தியாவில் இருக்கக் கூடாது, இலங்கைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி, சுபாஸ்கரனின் தண்டனை காலம் நடப்பு ஆண்டுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், சுபாஸ்கரனை நாடு கடத்தாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்கக் கோரி தமிழக அரசிடம் அவரின் மனைவி கோரிக்கை மனு அளித்திருந்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் சுபாஸ்கரன் மேல்முறையீடு செய்துள்ளார்.
சுபாஸ்கரனின் சட்டத்தரணிகள், அவரது மனைவியும் குழந்தைகளும் தமிழ்நாட்டில் குடியேறிவிட்டதாகவும், உள்நாட்டு மோதலில் அவர் ஈடுபட்டிருப்பதால் இலங்கைக்குத் திரும்புவது அவரது உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் வாதிட்டனர்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் போது தனது குடும்பம் பேரழிவு தரும் இழப்புகளைச் சந்தித்ததாக சுபாஸ்கரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராகப் போரில் ஈடுபட்டதால், இலங்கைக்குத் திரும்புவது தனது உயிருக்கும் தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அப்படியானால் நீங்கள் வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
நீதிமன்றம், உத்தரவைப் பிறப்பிக்கும் போது, சட்ட நடைமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டுள்ளதாகவும், சுபாஸ்கரன் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே.வினோத்சந்திரன் ஆகியோர் அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், ‘உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்கள்தொகையுடன் போராடி வருகிறோம்.
அனைத்து நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்க இந்தியா தர்மசத்திரம் அல்ல.
இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் சென்று அடைக்கலம் கோருங்கள்’ என்று தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.