பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன் – ரணில் சிறப்பு அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
“1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜேவிபி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை விதைக்க வேலை செய்தது.
அந்த நேரத்தில், நாட்டின் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.
பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மகாவலியிலிருந்து கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் மையம் மற்றும் வணிக மண்டலம் போன்ற பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தன. அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவம் வரவழைக்கப்பட்டது.”
பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக இலங்கை உர உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல கைவிடப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அந்த நேரத்தில், இலங்கை மின்சார சபையின் பல அதிகாரிகள் ஏற்கனவே அங்கு பல வீடுகளில் வசித்து வந்தனர்.
இந்த பயங்கரவாத காலகட்டத்தில், சபுகஸ்கந்த பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார்.
அந்த நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை தொடர்புகொண்டு, வீட்டு வளாகத்தில் உள்ள காலியாக உள்ள வீடுகளை இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளை களனி பொலிஸ் கண்காணிப்பாளர் நளின் தெல்கொடவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், ஒரு மாகாண சபை உறுப்பினர், ஒரு கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் உட்பட பல நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில், மற்றொரு மாகாண சபை உறுப்பினரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதிகாரத்தில் இருந்த அரசாங்கம், நாட்டில் அமைதியையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்த அதே வேளையில், வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் பாடுபட்டது.
1994ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைகள் நடந்ததா என்பதை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆணையம் ஒன்றை அமைத்தார். அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன்.
அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். முழுமையான அரசியல் சேற்றைப் பரப்பும் நோக்கத்துடன் பட்டலந்த ஆணையம் நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வழங்குவது முறையல்ல என்று அறிக்கையில் உள்ள முடிவுகள் கூறுகின்றன.
வீடுகளை பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்தச் செயலுக்கு நளின் தெல்கொடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது. ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் எதுவும் எனக்குப் பொருந்தாது.
ஆணைக்குழுவின் அறிக்கையின் இறுதி அவதானிப்புகள் 1988-90 காலப்பகுதியில் ஜேவிபி செய்த ஏராளமான பயங்கரவாதச் செயல்களைக் குறிப்பிடுகின்றன. அதன் பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜேவிபி செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்குப் பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை மறைத்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. கடந்த 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வின் போது அறிக்கையாக கிடைத்திருந்தது. ஆனால் யாரும் அதைப் பற்றி விவாதிக்கக் கேட்கவில்லை.
குறைந்தபட்சம் ஜேவிபி அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. பலர் அந்த அறிக்கையை ஏற்கவில்லை. எனவே, நாடாளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் மூலம் குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற முயன்றதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிக்கையை விவாதிக்கும் பாரம்பரியம் இந்த நாட்டிலோ அல்லது பிற நாடாளுமன்றங்களிலோ இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.