2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – அரையிறுதியில் மோதும் இலங்கை அணி

2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதவுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்க உள்ளது.
இதேவேளை, இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.
இதில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை குவித்திருந்தது.
யுவராஜ் சிங் 30 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றிருந்தார். அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 42 ஓட்டங்களை குவித்திருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.