பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை தரப்படுத்தல்

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பயங்கரவாத குறியீடு என்பது சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் பயங்கரவாதத்தின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளின் தரவரிசை ஆகும்.
உலக மக்கள்தொகையில் 99.7 வீதம் பேரை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ளன.
மேலும் 2019 முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக தொடர்புடைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.