மீள இணையும் பொலிஸ் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பரிசோதனை

இடைநீக்கம் செய்யப்பட்டு அல்லது சேவையை விட்டு வெளியேறி, மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறி பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, பொலிஸ் வைத்தியசாலையில் பொருத்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரி ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வைத்திய அறிக்கை ஊடாக தெரியவந்தால், அந்த அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தவோ அல்லது செயலில் உள்ள பணியில் மீண்டும் சேரவோ அனுமதிக்கப்பட மாட்டாது என பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.