பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் செல்கையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த
பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுகம்பொல பகுதியில் இன்று கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன்
பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பெண் காரை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த
பொலிஸார் முற்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக
கூறப்படுகின்றது.

இதன்போது தாம் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி எனவும் கூறியுள்ளார்.

எனினும் அவர் கூறியதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக்குறைவான
முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர்
போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This