போர் நிறுத்த அறிகுறிகளுடன் வெள்ளை மாளிகை சந்திப்பு நிறைவு

போர் நிறுத்த அறிகுறிகளுடன் வெள்ளை மாளிகை சந்திப்பு நிறைவு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவுடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசியுள்ளார்.

ரஷ்யாவுடன் விரைவான சமாதான உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தனது நாட்டின் நலன்களைப் பாதுகாக்க ஜனாதிபதி டிரம்புடனான சந்திப்பைப் ஜெலென்ஸ்கி பயன்படுத்திக்கொண்டார்.

உக்ரைன் ஜனாதிபதியை ஆதரிக்க வாஷிங்டனுக்கு விரைந்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் குழுவுடன் டிரம்பும் ஜெலென்ஸ்கியும் பல மணி நேரம் சந்தித்துப் பேசியிருந்தனர்.

அவர்கள் பொதுவில் உற்சாகமான மனநிலையில் வெளிப்பட்டனர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்துதான் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் லென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் முத்தரப்பு சந்திப்புக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான எந்தவொரு எதிர்கால சமாதான உடன்படிக்கையிலும் உக்ரைனின் நிலைப்பாட்டை வலுப்படுத்த திங்களன்று ஐரோப்பிய தலைவர்கள் வாஷிங்டனுக்கு திடீரென வந்திருந்தனர்.

குறைந்தபட்சம் குறுகிய காலத்திலாவது, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மீது கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகள் பலனளித்ததாகத் தெரிகிறது.

உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இராஜதந்திர ரீதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் புடின் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியாக இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

ஆனால் இந்த சந்திப்பில் முடிவெதுவும் எட்டப்படாத நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திங்களன்று (இன்று செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டால், ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கும் என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்யத் தலைவருக்கும் இடையே நேரடி சந்திப்பை ஏற்படுத்துவது குறித்து டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசினார்.

எனினும், இந்த மூவருக்கும் இடையிலான சந்திப்பு எப்போது நடைபெறும் அல்லது நடைபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில், புடின் ஆயுத பலத்தால் தான் விரும்பியதை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தால், அவர் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்க மாட்டார் என்று இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்

“ஜனாதிபதி புடினும் அமைதியை விரும்புகிறார் என்று நான் நம்பவில்லை,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். “அவரது இறுதி இலக்கு உக்ரைனை பலவீனப்படுத்தி முடிந்தவரை அதிக நிலப்பரப்பை கைப்பற்றுவதாகவும்” என்றார்.

ரஷ்யப் படைகள் மீண்டும் உக்ரைனுக்குள் நுழைய முயற்சிக்காமல் இருக்க பாதுகாப்பு உத்தரவாதங்களும் அமைதி காக்கும் நடவடிக்கைகளும் தேவைப்படும் என்று பிரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

“உறுதியான மற்றும் வலுவான அமைதி ஒப்பந்தம்” மட்டுமே தேவை என்று கூறினார். ஆங்கரேஜில், ரஷ்யா போர் நிறுத்தத்தை மறுத்துவிட்டது, ஆனால் அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் இல்லாமல் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியும் என்று உறுதியாக நம்புகிறார்.

“என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்,” என்று மக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This