இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை  மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர் விமானிகளை நாட்டிற்கு திரும்பச் சொல்லுமாறும் இஸ்ரேலுக்கு
ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

“ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக நான் கருதுகிறேன். போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் செய்த பின்னரும், இஸ்ரேல் ஏராளமான குண்டுகளை வீசியுள்ளது என வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பின் போது ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது நான் இதற்கு முன்பு பார்த்திராத மிகப்பெரிய அளவிலான குண்டு வீச்சு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தற்போது அமுலில் இருப்பதாகவும் இரு தரப்பினரும் அதை மீற வேண்டாம் என இன்று ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

ஆனாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

 

Share This