மின் தடை குறித்து இன்று விசேட கலந்துரையாடல்
![மின் தடை குறித்து இன்று விசேட கலந்துரையாடல் மின் தடை குறித்து இன்று விசேட கலந்துரையாடல்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/power-cut.jpg)
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பாணந்துறை கிரீட் உப மின் நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக நேற்று (09) காலை 11.15 மணியளவில் நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டது.
பாணந்துறை கிரீட் உப மின் நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் ஏற்பட்ட விபத்தே இந்த மின் தடைக்குக் காரணம் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
எனினும், இந்த சம்பவத்தால் மின்சார அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையே மின் தடைக்குக் காரணம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையால் மின்சார அமைப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால், மின்சார தேவை குறைவாக இருந்ததால் அந்த பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
மாலை 6.00 மணியளவில் இலங்கை மின்சார சபையால் மின்சார விநியோகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தாலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பு செயற்பட்டதால் அங்குள்ள 3 மின் பிறப்பாக்கிகளும் தற்காலிகமாக செயலிழந்தன.
இதன் விளைவாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோட் திறன் இழப்பு ஏற்பட்ட நிலையில், மாலை 6.00 மணி முதல் மின்சார பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக பல பகுதிகளில் மின்சாரம் மீண்டும் தடைப்பட்டது.
இருப்பினும், தேசிய மின்சார அமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்ப, அனல் மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெற மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இலங்கை மின்சார சபையால் இரவு 9.45 மணியளவில் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க முடிந்தது.
பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால் செயலிழந்துள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகளை மீண்டும் இயக்க சுமார் 4 நாட்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில் இன்றைய கலந்துரையாடலில் மின்வெட்டு இல்லாமல் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.