இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடல்சார் ஊழியர்களுக்கும் மீனவர்களுக்கும் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
2,751 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் இதுவரையில் 18 பேர் காயமடைந்துள்ளதுடன், 2,710 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் இழப்பீடுகளுக்கான நட்டஈடுகளை வழங்கும் நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன முன்னெடுத்துள்ளன.
139 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.