பஸ் விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி இரங்கல்

பஸ் விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி இரங்கல்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயற்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சட்டங்களை செயற்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காக “கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய வைத்தியசாலைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் நினைவூட்டுகிறேன்.

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா  01 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

Share This