மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்

மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை எரிசக்தி மற்றும் நிதி அமைச்சுகள் தற்போது முன்னெடுத்து வருகின்றன.

தற்போதைய நடைமுறையில் வறட்சி காலங்களில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலங்களில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.

ஆனால் புதிய முறையின்படி, ஆண்டின் முதல் பகுதியில் ஏற்படும் வரட்சிக் கால நட்டத்தை, ஆண்டின் இரண்டாம் பாதியில் கிடைக்கும் அதிக மழையினால் ஈடுகட்டும் வகையில் சீரான கட்டண நிர்ணயம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றத்தினால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது மின்சார செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடிவதோடு, மின்சாரக் கட்டண மாற்றத்தினால் அடிக்கடி பொருட்களின் விலைகள் உயர்வதும் கட்டுப்படுத்தப்படும். சந்தையில் பொருட்களின் விலைகள் குறுகிய காலத்தில் பாரிய அளவில் ஏற்றத்தாழ்வு அடைவதை இது தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கட்டணச் சூத்திரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது நாடு முழுவதும் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )