தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் நடைமுறை

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை, தேசிய விபத்து தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புகளையும், குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய விபத்து தடுப்பு வாரத்தினுள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள், பயிற்சி திட்டங்கள் மற்றும் செயன்முறைகள் என்பன செயற்படுத்தப்படவுள்ளன.
இலங்கையில் ஆண்டுதோறும், 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துகளால் மரணிப்பதுடன், ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6 முதல் 8 பேர் சிகிச்சைக்காக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இந்தநிலையில், குறித்த வாரத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட வீதிகள், பணியிடங்கள் மற்றும் நீரில் மூழ்குவதால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் இடங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு, தொற்றா நோய் பிரிவு, விபத்து தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு மற்றும் பிராந்திய சுகாதாரப் பணிமனைகளின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவுள்ளன.