அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் பாரிய பொதுப் பேரணி ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் எவரும் 21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் இணைந்துகொள்ள முடிவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அரசாங்கத்தின் திறமையின்மை எல்லா கோணங்களிலிருந்தும் தெரிகிறது. மக்களின் துன்பங்களைப் பார்க்கும்போது, ​​நேர்மறையாக இருக்க எங்களுக்கு எந்த வழியும் இல்லை.

எனவே, முதல் பாரிய அரசாங்க எதிர்ப்பு பேரணியை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு சக்தியும் எங்களுடன் இணையலாம்.

அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொய்களுக்கு எதிராக அரசாங்கத்தின் திறமையின்மையை உலகுக்குக் காட்ட நாங்கள் பேரணியை நடத்துகிறோம். அதில் அனைவரும் எங்களுடன் இணையலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This