தாழங்குடாவில் மர்மமான முறையில் தோண்டப்பட்ட குழி – விசேட அதிரடிப்படையினர் சோதனை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஷஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து சோதனை செய்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் நேற்று வியாழக்கிழமை (06) சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் ஷஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து சோதனை செய்துள்ளனர்.
இந்த நோதனை நடைபெற்ற காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த நான்காம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்டு, ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தை அடுத்து நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சில தீய சக்திகள் அந்த பகுதியில் ஏதாவதுபொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
