ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்

ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும் கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்

ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிக் களிப்புரை, சிங்களத் தேசத்தின் வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் ஈழ நிலம் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.

‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்

2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. “பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?” என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.

“இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்” என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்தபோது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.

அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்

போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர்கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.

இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’

“ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்” என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.

‘பொருட்களைப் பெற்றுக்கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.

போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்தபோது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

வடக்கு – கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்

தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு – கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு – கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.

வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்

நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.

வடக்கு – கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்றுகொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.

நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து

கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.

தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.

அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.

உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.

சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத்தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )