மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை

இலங்கையின் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.
சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறுமென புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78 ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(24) அதிகாலை காலமானார்.
இலங்கை சினிமா துறையில் ஒரு பொக்கிஷமாக மாலனி பொன்சேகா திகழ்ந்தார்.
மேடை, சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்தையும் தாண்டிய அவரது நடிப்புத் திறமை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
1947 ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்த மாலனி செனஹேலதா பொன்சேகா மேடை நாடகம் மூலம் தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தார்.
05 தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை சினிமா துறையில் வேரூன்றியிருந்த அவர் நிதானய, சிறிபாலா மற்றும் ரன்மெணிகா, துஷாரா மற்றும் ஆவா சொயா ஆதரே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் “பைலட் ப்ரேம்நாத்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக அப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
2010 முதல் 2015 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.