இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை

கொழும்பு பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்ததாக கூறப்படும் மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு தொடர்பு இல்லை என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்சவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த மோதல் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது விடுதியை சேர்ந்த ஒரு பாதுகாவலர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
விடுதியினுள் செல்வதற்க அடையாள மணிக்கட்டு பட்டி அணிவது கட்டாயம் என்று பாதுகாவலர்கள் தெரிவித்ததை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குழு உறுப்பினர்களில் ஒருவரிடம் அத்தகைய பட்டி இல்லாததால் பாதுகாப்பு காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.