அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ்நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்றிரவு அமித்ஷா அவர் வருகைத்தருவார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் நாளை பிற்பகல் 03 மணியளவில் ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மண்டல நிர்வாகிகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகளின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா கலந்துரையாடவுள்ளார்.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர் முழுவதும் 2000 மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க.வுடனான தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது.