தமிழகத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தின் சென்னையில் தங்கம் பவுன் விலை முதல்முறையாக ஒரே நாளில் 680 ரூபா அதிகரித்து 77 ஆயிரம் ரூபாவை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால்
பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு பவுன் தங்கம் 58 ஆயிரம் ரூபாவாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக
உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.