
கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் 2027ஆம் ஆண்டு வரை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு ஒக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது.
இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
எவ்வாறாயினும், இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.
இந்த நிலையில் , எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க இந்திய கிரிக்கெட் சபை விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீரின் ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டு வரை உள்ளது .
இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீரே தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தோல்வி தொடர்பாக கம்பீரிடம் விளக்கம் கோர இந்திய கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
