மீன்பிடி படகுகள் விபத்துக்குள்ளான சம்பவம் – சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள்

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்துக்குள்ளானபோது காணாமற்போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் அந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் இருவேறு பகுதிகளில் விபத்துக்குள்ளானதில் 06 மீனவர்கள் காணாமற்போயிருந்தனர்.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகொன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (27) மாலை புறப்பட்ட படகில் 05 மீனவர்கள் இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய மீனவர் ஒருவர் மாத்திரம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கு மீனவர்கள் காணாமற்போயிருந்தனர். இந்நிலையில் தற்போது இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த படகு வணிகக் கப்பலொன்றில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, களுத்துறையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமற் போயுள்ளனர்.
இந்நிலையில் காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் இரண்டு விபத்து சம்பவங்களில் காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளை கடற்படை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, மீனவர்களை தேடுவதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டர் மற்றும் Y-12 விமானத்தை ஈடுபடுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவிற்கமைய விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.