டில்லி குண்டு வெடிப்பு – பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?

டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்தத் திகதி மிகவும் முக்கியமானது, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் இதுவாகும்.
குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், “பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பழிவாங்க” விரும்பியதால் இந்தத் திகதி தெரிவுசெய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.
உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்களின்படி, சந்தேகிக்கப்படும் பயங்கரவாத தொகுதியின் உறுப்பினர்கள் விசாரணையின் போது தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான திட்டத்தை தயாரித்ததாகக் கூறியுள்ளனர்.
இதன்படி, தாக்குதல் குறித்த ஐந்து கட்ட திட்டத்தின் விவரங்களை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்:
முதல் கட்டம் : ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத தொகுதி உருவாக்கம்.
இரண்டாம் கட்டம் : ஹரியானாவின் நுஹ் மற்றும் குருகிராமில் இருந்து பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (IEDs) ஒன்று சேர்ப்பதற்கும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்வதற்கும் மூலப்பொருட்களை வாங்குதல்
மூனறாம் கட்டம் : ஆபத்தான இரசாயன IEDs உற்பத்தி மற்றும் சாத்தியமான இலக்கு இடங்களை உளவு பார்த்தல்.
நான்காம் கட்டம் : உளவு பார்த்த பிறகு தொகுதி உறுப்பினர்களிடையே கூடியிருந்த குண்டுகளை விநியோகித்தல்.
ஐந்தாம் கட்டம் : டில்லியில் ஆறு முதல் ஏழு இடங்களில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளை செயல்படுத்துதல்,
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தாக்குதல்களை நடத்துவதே அசல் திட்டமாக இருந்தது, ஆனால் செயல்பாட்டு தாமதத்திற்குப் பிறகு புதிய திகதி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் ஆறாம் திகதி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி, 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் திகதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, அதே இடத்தில் ஒரு புதிய ராமர் கோயில் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் 2020 இல் தொடங்கி இந்த ஆண்டு முடிவடைந்தன.
பல ஆண்டுகளாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்படும் என்று மிரட்டல் விடுத்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே கார் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
