இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலின் பின்னர் பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர்.
விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்புடைய நிறுவனமும் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனையோர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.