நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை – CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறையான கோரிக்கை எதிர்வரும் நாட்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நிலந்த ஜெயவர்தன குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக அவரை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.