அல் ஜசீரா நேர்காணல் – ரணில் கடும் அதிருப்தி

அல் ஜசீரா நேர்காணல் – ரணில் கடும் அதிருப்தி

அல் ஜசீரா ஊடகத்துக்கு தாம் வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பெரும்பான்மையான பௌத்த மக்களைக் கொண்ட இலங்கையின் முக்கிய மதத் தலைவர் மல்வத்து மகா நாயக்க தேரர் என்ற தனது கூற்றை அல் ஜசீரா ஒளிபரப்பும்போது முற்றிலுமாக துண்டித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேர்காணலில் கேள்விகளை கேட்க, தனக்குத் தெரியாத இரண்டு விடுதலை புலிகளுக்குச் சார்பான நபர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (6) மாலை ஒளிபரப்பான அல் ஜசீரா  நேர்காணல் தொடர்பில் உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக கொழும்பு மலர் வீதி உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“அல் ஜசீரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. இலங்கையில், நேர்காணல்கள் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இதில் நல்லது, கெட்டது இரண்டும் அடங்கியிருக்கும். இருப்பினும், அல் ஜசீரா என்னுடன் இரண்டு மணி நேர நேர்காணலை நடத்தி அதன் ஒரு பகுதியை மட்டுமே ஒளிபரப்பியது.

சில நல்ல கருத்துகள் வெளியிடப்படவில்லை. அவை அனைத்தும் ஒளிபரப்பப்பட்டிருந்தால், இன்னும் முழுமையான தெளிவு கிடைத்திருக்கும்.

அம்பிகா சத்தியநாதன் நேர்காணலுக்கு வருவதாகச் கூறினார்கள். ஆனால் அவர் வரவில்லை. இறுதியாக, ராசரத்தினம் என்ற பெண் ஒருவர் வந்தார். இதைப் பற்றி எனக்கு முன்பு சொல்லப்படவில்லை. அவரது கணவர் அன்டன் பாலசிங்கத்திற்கு ஆலோசனை வழங்கியவர். அது தவறு என்றால், மதுரா ராசரத்தினம் அதைத் திருத்திக் கொள்ளலாம்.

இரண்டு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்புடைய நேர்காணலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பான்சி ஹாரிசன் அங்கே இருந்தார்.

போரில் நாற்பதாயிரம் பேர் இறந்தார்கள் என்ற கதை பொய் என்று நான் சொன்னேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டார். இது போன்ற பல விடயங்கள் இருந்தன. நான் அவற்றை இங்கே குறிப்பிடப் போவதில்லை.

இலங்கையின் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்றும், நமக்குத் தெரிந்த முக்கிய மதத் தலைவர் மல்வத்த மகாநாயக்கர் என்றும் நான் கூறினேன்.

மற்ற அனைத்து பாதிரியார்களும், கார்டினல்களாக இருந்தாலும் சரி, பிஷப்களாக இருந்தாலும் சரி, அவருக்கு பின்னர் என்று நான் கூறினேன். ஆனால் அது ஒளிபரப்பப்படவில்லை.

நான் ஒருபோதும் அதிகாரத்தில் இல்லை என்று கூறி கேள்விகளைத் தட்டிக்கழித்ததில்லை. ராஜபக்ச குடும்பம் குறித்து தான் அதிகம் கேட்கப்பட்டது.” என்றார்.

Share This