சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல
”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும், அமெரிக்க இராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளது எனவும் அதன்படி, அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது எனவும், பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை எனவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அத்துடன் சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது எனவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல எனவும், இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ” அமெரிக்காவின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை எனவும், கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர் எனவும், திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.