கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நான்கு மணி முதல் நாளை அதிகாலை நான்கு மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புத்தளம், குருநாகலை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை நான்கு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கிரிந்திவெலையில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 244 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35-45) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவிவரும் கனமழை காரணமாக, மூன்று மாவட்டங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று அதிகாலை 3.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கல பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிக்கு முதல் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )