
அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை
அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இதற்கான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யாது, முழுமையாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இழக்கப்பட்ட நிதியைச் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து மீள வசூலிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, அந்தப் பொறுப்பைத் தகுதியான அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
திறைசேரியின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் எவரும் நாட்டில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என எச்சரித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், இது குறித்து அரசாங்கம் உடனடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
