
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச சேவைகள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ், அந்நாட்டின் புதிய அரசாங்க மாதிரி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து அரசத் துறைகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் 50 சதவீதத்தை ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) எனப்படும் தன்னாட்சி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் மூலம் இயக்க ஐக்கிய அரபு இராச்சியம் திட்டமிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னாட்சி அமைப்புகளின் மூலம் இவ்வளவு பெரிய அளவில் அரசாங்கத்தை இயக்கும் உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் உருவெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஒரு கருவி மட்டுமல்ல. அது தரவுகளை ஆய்வு செய்து, முடிவெடுத்து, அவற்றைச் செயல்படுத்தி, உடனுக்குடன் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும். சேவைகளை மேம்படுத்தவும், விரைவான முடிவுகளை எடுக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் இது நமது ‘நிர்வாகக் கூட்டாளியாக’ மாறும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு ஃபெடரல் ஊழியருக்கும் செயற்கை நுண்ணறிவில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும்.
இதன்மூலம் உலகில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் வலிமையான அரசாங்கக் கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கம்.
“உலகம் மாறுகிறது, தொழில்நுட்பம் வேகமெடுக்கிறது. ஆனால், ‘மக்களே முதன்மையானவர்கள்’ என்ற எமது கொள்கை மாறாது. வேகமான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதே எமது இலக்கு” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் பணிகளை ஷேக் மன்சூர் பின் சையத் மேற்பார்வையிடுவார்.
இதற்கென மொஹமட் அல் கெர்காவி தலைமையில் அமைக்கப்பட்ட பிரத்யேகக் குழு, பணிகளைத் துரிதப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
