
மீண்டும் ஈரானின் பிடிக்குள் ஹார்முஸ் நீரிணைப்பு ; திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதிரடி கட்டுப்பாடு
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ அறிவிப்பு உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணைப்பை மீண்டும் தனது “கடுமையான கட்டுப்பாட்டிற்குள்” கொண்டு வருவதாக ஈரான் ராணுவத் தலைமை இன்று அறிவித்துள்ளது.
லெபனான் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த நீரிணைப்பு நேற்று திறக்கப்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன.
இந்திய மற்றும் சீனக் கப்பல்கள் தங்களின் நடுநிலைமையை வெளிப்படுத்தியபடி அந்த நீர்வழியைக் கடக்க முயலும் அதேவேளையில், பல வணிகக் கப்பல்கள் பாதியிலேயே திரும்பிச் செல்கின்றன.
மற்றொருபுறம், ஒரு பெரிய அமைதி ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி Asim Munir மற்றும் பிரதமர் Shehbaz Sharif ஆகியோர் இதற்கான சமரச முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரம் இஸ்லாமாபாத்தில் இதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இருப்பினும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் முரண்பாடு நீடிக்கிறது.
யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பிப்ரவரி 28-ம் திகதி தொடங்கிய இந்தப் போரில் உச்சக்கட்டமாக ஈரான் உச்சத்தலைவர் கொல்லப்பட்ட நிலையில், 50 நாட்களாக அங்கு இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இன்னும் நான்கு நாட்களில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
