யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும் நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும் நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூலை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னரான சமூகம் மற்றும் பண்பாட்டை அடையாளம் காணமுடிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் எஸ்.பத்மநாதனின் “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna 300 BC–AD 500” (கி.மு 300 – கி.பி 500 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பண்டைய நாகரிகம், சமுதாயம் மற்றும் கலாசாரம் குறித்த பார்வை’ எனும் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த வார இறுதியில் (11) கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

பேராசிரியர் பத்மநாதனின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை, குறிப்பாக நாகர்களின் வரலாற்றைப் பற்றி மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் ஆராய்கிறது. தொல்பொருளியல் சான்றுகள் மற்றும் ஒப்பீட்டு வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் யாழ் மாவட்டத்துக்கே உரிய தனித்துவமான பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்த ஒரு சமூகம் பற்றிய கதையை வாசகர்களுக்குக் கூறுகிறது.

சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகெண்ட இந்நிகழ்வில் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், கலாநிதி பி.ஏ.ஹுசைன்மியா மற்றும் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அதன்படி பகிரப்பட்ட பொதுவான வரலாற்றுக் கூறுகளை எடுத்துரைப்பதன் ஊடாக சமூகங்களை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்த நூல் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், ‘வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றியது மாத்திரமல்ல. மாறாக அது உள்ளீர்த்தல், நீதி மற்றும் எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் விட்டுச்செல்ல விரும்பும் நாடு என்பன பற்றிய இன்றைய தேர்வுகளுக்கான வழிகாட்டியுமாகும்’ எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை அறிவைத் தரும் அறிஞர்கள் பலர் இருப்பதாகவும், இருப்பினும் ஒரு நாடு தன்னைத் தானே புதிய கோணத்தில் பார்ப்பதற்கு உதவும் மிகச்சில அறிஞர்களில் பேராசிரியர் பத்மநாதனும் அடங்குவதாகவும் கலாநிதி ஜெஹான் பெரேரா தனது உரையில் பாராட்டு வெளியிட்டார்.

அதேபோன்று நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஹுசைன்மியா, கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பகுதியில் ஒரு தனித்துவமான தமிழ் அரசியல் கட்டமைப்பு உருவானமைக்கான சாத்தியப்பாடுகளை இந்நூல் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

நிறைவாக நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பத்மநாதன், ‘கடந்த 100 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெற்ற, இதுவரை பயன்படுத்தப்படாத வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னர் நிலவிய சமூகம் மற்றும் பண்பாட்டை எம்மால் அடையாளம் காணமுடிந்துள்ளது’ என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )