அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்

அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

அவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி சூசன் கோய்ல் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த சூசன் கோய்ல், பல முக்கிய கட்டளைப் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அவுஸ்திரேலிய இராணுவத்தின் எந்த சேவைப் பிரிவிற்கும் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆகும்.

இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் மத்தியில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

தற்போது அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் சுமார் 21% பெண்கள் பணியாற்றுகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 25% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புப் படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த மாற்றம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

அத்துடன், தற்போதைய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் மார்க் ஹேமண்ட், அவுஸ்திரேலியா பாதுகாப்புப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக ரியர் அட்மிரல் மேத்யூ பக்லி கடற்படைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )