
ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு 50% வரி – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகள் உடனடியாக பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் என்றும், எவ்வித விலக்குகளும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டதையடுத்து, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும்
ட்ரம்ப் கூறினார். எதிர்காலத்தில் அமெரிக்கா, ஈரானுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் இடம்பெறாது என்றும், அணு தொடர்பான அனைத்து வசதிகளையும் அகற்ற அமெரிக்கா ஈரானுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஈரானின் அணு நிலையங்கள் அமெரிக்காவின் செயற்கைக்கோள் கண்காணிப்பில் உள்ளதாகவும், சுங்கவரி மற்றும் தடைகளை தளர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறினார்.
மேலும், 15 அம்சங்களைக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
